Sunday, June 21, 2015

கல்வி உதவித்தொகை நிலுவை : திணறும் இன்ஜி., கல்லூரிகள்


இன்ஜி.,கல்லுாரி மாணவர்களுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை வழங்க தாமதம் ஆவதால், தனியார் கல்லுாரிகள் திணறி வருகின்றன.தமிழகம் முழுவதும் 573 இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லுாரியிலும் 30 சதவீதம் என்ற அளவில், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 70 ஆயிரமும் கல்வி உதவித்தொகையாக தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் பரிந்துரையின் பேரில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. எம்.இ., படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.25 முதல் 30 ஆயிரம் வரையும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், கல்வி கட்டணம், அந்த ஆண்டின் மார்ச்அல்லது ஏப்ரல் இறுதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த மே மாத கடைசி வாரத்தில், மொத்த தொகையில் 30 சதவீதமே வழங்கப்பட்டது. மீதி 70 சதவீதம் என்ற அடிப்படையில், ஒவ்வொரு கல்லுாரிக்கும் ரூ.50 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை நிலுவை உள்ளது.
இந்த தொகையை எதிர்பார்த்தே கல்லுாரிகள், வங்கியில் கடன் பெற்று உள்ளன. கடன் தொகையை செலுத்த, வங்கிகள் கல்லுாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியாமலும், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும் தனியார் கல்லுாரிகள் திணறி வருகின்றன

No comments:

Post a Comment