மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புக்கு தடை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு உடனடியாக, தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என, ராஜ்யசபாவில், தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
சட்டசபை தேர்தலை
காரணம் காட்டி, தமிழக எம்.பி.,க்கள் அனைவரும்,பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கு மட்டம் போட்டுள்ளனர். இதனால்,தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு, ஆளே இல்லாத பரிதாப நிலை காணப்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டத் தொடரில், நேற்று, முதன்முறையாக தமிழகத்தின் குரல், பார்லி.,யில் ஒலித்தது.
நுழைவுத் தேர்வு விவகாரம் குறித்து, ராஜ்யசபாவில், தி.மு.க., மூத்த எம்.பி., கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:
மாநில மொழிகளில், பள்ளிப் படிப்பை படித்துள்ள லட்சக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் நாடு முழுவதும் உள்ளனர். பள்ளி கல்வித் திட்டத்தில், மாநிலங்களுக்கு இடையே பல்வேறு மாறுபாடுகளும் உள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதற்கும் சேர்த்து, ஒரே மாதிரியாக நுழைவுத் தேர்வு நடத்த வேண்டுமென,சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது; இது, ஏற்கத்தக்கதல்ல. ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, கிராமப்புற மாணவர்களின் தலையில் விழுந்துள்ள இடி மட்டுமல்லாது,நாட்டின் அரசியல் சட்டத்திற்கு விரோதமானதும் கூட.
இந்த உண்மைகளை மீறி, பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்தினால், அது, மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கும். அதனால், நாடு முழுவதும், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புக்கு தடை ஏற்படுத்தும் வகையில், உடனடியாக,தனிச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment