Wednesday, August 6, 2014

இன்ஜினியரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது - பொறியியல் கல்லூரிகளில் 1.2 லட்சம் இடங்கள் காலி

இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் சீட்டுகள் காலியாக உள்ளன. இந்நிலையில் துணை கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில், இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சத்து 11 ஆயிரத்து 589 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து 73,687 பேர் விண்ணப்பித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 7ம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் துவங்கியது. நாள்தோறும் சராசரியாக 4 ஆயிரத்து 400 மாணவ, மாணவிகள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். ஜூலை 7ம் தேதி தொடங்கி கடந்த 4ம் தேதி வரை 28 நாள்கள் நடைபெற்ற கவுன்சலிங்கில், 1 லட்சத்து 64 ஆயிரத்து 929 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில், அனைத்து பிரிவுகளும் சேர்த்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 79 மாணவ, மாணவிகள் இடங்களை தேர்வு செய்தனர். 59 ஆயிரத்து 300 மாணவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்கவில்லை. 496 மாணவர்கள் இடம் வேண்டாம் என கூறி சென்றுள்ளனர்.
இந்தாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையை பொறுத்தளவில், பல்வேறு பாடப்பிரிவுகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்து 510 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இதனால், பல இன்ஜினியரிங் கல்லூரிகள் நிதி சுமையின் காரணமாக இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இன்ஜினியரிங் அட்மிஷனில் 80 ஆயிரம் சீட்கள் நிரம்பவில்லை. இந்த வருடம் இது மேலும் 20 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் போதிய ஆர்வம் காட்டாததே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று கவுன்சலிங் நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான மாணவர்கள் நேற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் நேரில் பதிவு செய்தனர். பொதுப் பிரிவில் கலந்துகொள்ள தவறிய மாணவர்களும், இந்த துணை கவுன்சலிங்கில் கலந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, August 2, 2014

சென்னை: தமிழகத்தில், அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், பி.இ., முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று(ஆகஸ்ட் 1ம் தேதி) துவங்கின. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு சென்றனர்.
"கல்லூரிகளில், ராகிங் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அண்ணா பல்கலை தெரிவித்தது.
கடந்த ஜூன் இறுதியில் துவங்கிய, பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 4ம் தேதியுடன் முடிகிறது. அண்ணா பல்கலை நடத்திய கலந்தாய்வில் 90 ஆயிரம் மாணவர்கள் பி.இ., படிப்பில் சேர்ந்தனர். கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு மூலம், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர்.
"நாடு முழுவதும், பி.இ., முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆக., 1ம் தேதி துவங்க வேண்டும்" என்பது, ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு) உத்தரவு.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 560 பொறியியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள், நேற்று துவங்கின. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு சென்றனர்.
இது குறித்து, அண்ணா பல்கலை வட்டாரம் கூறியதாவது: முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்கள் அனைவருக்கும், ஒரு மாதம் வரை, பல்வேறு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் 2 பாடத் திட்டங்களுக்கும், பி.இ., பாடத் திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகள், பாடத்திட்டங்கள் விவரம், அவற்றை எந்த வகையில் எதிர்கொண்டு, சிறப்பாக படிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
சிறப்பாக படித்து தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அமையும். ஒரு மாதத்திற்குப் பிறகே, பி.இ., பாடம் சார்ந்த வகுப்புகள் ஆரம்பிக்கும்.
கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்தால், சீனியர் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த தகவல்களை மாணவர்கள் மத்தியில் தெரிவிக்கவும், தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். ராகிங் செய்தால், என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்ற விவரங்களை கல்லூரி வளாகங்களில், ஆங்காங்கே, அறிவிப்பு பலகைகளாக வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அண்ணா பல்கலை வட்டாரம் தெரிவித்தது.