Wednesday, August 5, 2015

பொறியியல் படிப்பின் எதிர்காலம் என்ன ஆகும்?


தமிழகத்தில், 536 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு நடந்த கலந்தாய்வுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் கீழ் உள்ள இடங்களில் காலி ஏதும் இல்லை; இடங்கள் நிரம்பி விட்டன. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கல்வி பயில பல்வேறு கல்விப் பிரிவுகளில் இடம் இருந்தபோதும், 94,500 இடங்கள் நிரம்பவில்லை. இவ்வாறு நிரம்பாத கல்லூரிகள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என்பது, சேர்க்கை முடிவில்தெரியவந்திருக்கிறது.
பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிவுற்ற நிலையில், மெக்கானிக்கல் பிரிவுக்கு கிராக்கி அதிகம் இருந்தது. இப்பிரிவுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராக்கி உள்ளது.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, பொறியியல் படிப்பில் ஆர்வம் குறைந்திருப்பதும், பெண்களின் ஆர்வம் குறைந்திருப்பதும் நன்றாக தெரிகிறது.கணினி படிப்புக்கு முக்கியத்துவம் குறைந்ததும், இதில் கவனிக்கத்தக்கது. தவிரவும், முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை, 50 ஆயிரத்துக்கும் அதிகமாகும்.
இவைகளைப் பார்க்கும்போது, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளை, எந்த முறையில் திறன்அறி கல்வியாக மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.வேலைவாய்ப்பு, படித்து முடித்தபின் கிடைக்கும் வேலையின் நிரந்தரம், கிடைக்கும் சம்பளம் ஆகிய பல அம்சங்களை பெற்றோரும் மாணவ, மாணவியரும் முன் கூட்டியே எடை போடத் துவங்கியதன், அடையாளமாக இந்த பின்னடைவைக் கருதலாம்.
மேலும், 'இன்போசிஸ், விப்ரோ' உள்ளிட்ட நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு ஆள் எடுப்பதில், பல அணுகுமுறைகளை மாற்றிஉள்ளன. தகுதி, திறன் ஆகியவற்றை அலசி ஆய்ந்து எடுக்கும் முறைகளில் தேர்வு செய்யப்படுவோருக்கு, அந்த நிறுவனங்கள் அளிக்கும் பயிற்சிகளும் ஏராளம். அதே போல, கம்பெனியில் குறைந்த காலம் பணியாற்றி, சம்பளம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக, பணி மாறுவோர் எண்ணிக்கை குறைய, அவை முன்வந்திருப்பது நல்லது.மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகளை படித்தவர்கள் தாங்கள் படிப்புடன் தொடர்பு உடைய வேலை என்பதை விட வங்கிகள், அரசுத்துறை வேலைக்கும் விண்ணப்பிக்க முன்வந்திருக்கின்றனர்.
பொறியியல் பட்டங்களில் உள்ள பலதுறைகளில் படிக்கும் மாணவ, மாணவியரை கம்பெனிகள் இணைத்துக் கொண்டு, பணியின் அனுபவத்தை கற்றுத்தருவது என்ற அணுகுமுறை முற்றிலும் நடைமுறையாகுமா என்பது தெரியவில்லை. அப்படியே அக்கம்பெனிகளில் பணித்திறன் பெற்றாலும், அதற்குப்பின் சில ஆண்டுகளில் ஒப்பந்த பத்திரம் எழுதித்தந்து வேலை பார்க்க வேண்டியதும் வரலாம்.அதைவிட, பி.ஆர்க்., படிப்பு போன்ற தொழில் சம்பந்தமான படிப்பு படித்தாலும், வேலை கிடைப்பதில்லை. இது தமிழகம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் எழுந்திருக்கும் பிரச்னையாகும்.
அகில இந்திய தொழில் நுட்பக்குழு தகவல்படி, நாடு முழுவதும் உள்ள, 16.5 லட்சம் பொறியியல் படிப்பு இடங்களில், 8.45 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.இவற்றைப் பார்க்கும்போது, பொறியியல் படிப்பு, பட்டம் பெற்றபின் கிடைக்கும் வேலை, படிப்பு தொடர்பான பணி, குறைந்தபட்ச சம்பளம் ஆகியவை குறித்து மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரும் முறையாக, முன்கூட்டியே ஆலோசனை பெறாவிட்டால், இந்த நிலை மேலும் மோசமாகலாம்.பொறியியல் பட்டதாரிகள் மற்ற அறிவியல், கலை பட்டதாரிகளை போல, கிடைக்கும் பணிகளை ஏற்று, அதற்குப்பின் தகுதி, திறமையை வளர்த்துக் கொண்டு, போட்டி களத்தில் இருக்கும் அவலநிலை அதிகரிக்கக் கூடாது.

'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' பயன்படுத்த இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தடை?


மாணவர்களிடம் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கவும், கல்வித் தரம் பாதிக்காமல் இருக்கவும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' பயன்பாட்டுக்குத் தடை விதிக்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
மாணவர்கள், தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில், அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்த, அண்ணா பல்கலை வளாகத்தில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மொபைல் போன் கொண்டு வர, முதலில் தடை இருந்தது. சில ஆண்டுகளாக, மொபைல் போன் கொண்டு வரலாம்; ஆனால், வகுப்பு நேரங்களில் பயன்படுத்தக் கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
தனித்தனியே...:
அண்ணா பல்கலை வளாகத்தில், வகுப்புகள் மற்றும் விடுதிகள் இருக்கும் பகுதிகளில், மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கு, இலவச வை - பை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அனைவருக்கும், தனித்தனியே பயன்பாட்டு முகவரி மற்றும் ரகசியக் குறியீட்டு எண்ணும் தரப்பட்டுள்ளது. இந்த வை - பை வசதியில், அனைத்து வகை இணையதளங்களையும், தங்கள் மொபைல் போனில், மாணவர்கள் இலவசமாக இயக்க முடியும். ஆனால், ஆபாச கருத்துக்கள் மற்றும் படங்களுடன் கூடிய இணையதளங்கள், 'யூ - டியூப்' எனப்படும், வீடியோ பார்க்கும் வசதியுடைய தளங்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, இந்த ஆண்டு முதல், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை தடை செய்ய, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. ஆனால், 'டுவிட்டர், டெலக்ராம், இன்ஸ்டாக்ராம்' போன்ற தளங்களை இயக்க முடியும்.
அனைத்து பயிற்சிகளும்...:
இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:அண்ணா பல்கலை மாணவர்கள், பட்டப்படிப்பை முடித்தவுடன் பணிக்குச் செல்லவோ, உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி படிப்பை தொடரவோ, தேவையான அனைத்து பயிற்சிகளும் தரப்படுகின்றன.தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதில், அண்ணா பல்கலை மாணவர் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக, அனைத்து வகை தகவல் தொடர்பு வசதிகளும், இலவசமாக தரப்பட்டுள்ளன. ஆனால், சமீப காலமாக, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்றவற்றில் தவறான பதிவுகள், பரப்பி விடப்பட்டு, மாணவர்கள் கவனம் திசை திருப்பப்படுவதாக, பேராசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, அண்ணா பல்கலைக்குள் வகுப்பு நேரங்கள் மற்றும் விடுதிகளில், சிறப்பு வகுப்பு நேரங்களில், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதள செயல்பாட்டைத் தடை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டும், சமூக வலைதள இயக்கத்தை, வை-பை வசதியில் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சீனியர்களுக்கு தடை:
முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், சீனியர் மாணவர்கள், ஜூனியர்களை, 'ராகிங்' செய்யாமல் தடுக்க, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சீனியர்கள் யாரும் ஜூனியருடன் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு பேசக்கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜூனியர் மாணவர்கள் வரும் பகுதிகளில், 'ராகிங்' தடுப்புக் குழு பேராசிரியர் கண்காணிக்கவும், ராகிங் தடுப்பு வாகனம், அண்ணா பல்கலை முழுவதும் சுற்றி வரவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Saturday, July 18, 2015

பி.இ. சேர்க்கை: வழக்கம்போல் முன்னிலையில் மெக்கானிக்கல் பிரிவு!


பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது முதல் அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக இசிஇ இருந்து வந்த நிலையில், புதன்கிழமை மெக்கானிக்கல் பிரிவு முன்னிலை பெற்றது.
மெக்கானிக்கல் பிரிவை இதுவரை 11,574 பேர் தேர்வு செய்திருக்கின்றனர். இசிஇ பிரிவை 11,339 பேர் தேர்வு செய்துள்ளனர்.
இதன் மூலம் கடந்த ஆண்டுகளைப் போல் இம்முறையும் மெக்கானிக்கல் பிரிவே முன்னிலை பெறத் தொடங்கியிருக்கிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மெக்கானிக்கல் பிரிவின் மீதே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இந்தப் பிரிவே அதிக மாணவர்கள் தேர்வு செய்த பிரிவாக இருந்து வருகிறது.
கடந்த கல்வியாண்டு (2014-15) கலந்தாய்வின் போது, ஆரம்பம் முதல் மெக்கானிக்கல் பிரிவே முன்னிலை பெற்று வந்தது. கலந்தாய்வின் முடிவில் 43,207 மெக்கானிக்கல் இடங்களில் 26,770 இடங்கள் நிரம்பின. இசிஇ பிரிவைப் பொருத்தவரை 41,484 இடங்களில் 19,012 இடங்கள் மட்டுமே நிரம்பின.
இந்த கல்வியாண்டிலும் இதே நிலைதான் தொடரும் என பொறியியல் நிபுணர்களும், பேராசிரியர்களும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கலந்தாய்வு ஆரம்பித்தது முதல் இசிஇ பிரிவே முன்னிலை பெற்று வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை மெக்கானிக்கல் பிரிவு முன்னிலை பெறத் தொடங்கியது. பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிய இன்னும் 13 நாள்களே உள்ள நிலையில் 41,820 இடங்களைக் கொண்ட மெக்கானிக்கல் பிரிவை 11,574 பேர் தேர்வு செய்திருக்கின்றனர்.
இசிஇ பிரிவில் மொத்தமுள்ள 38,427 இடங்களில் 11,339 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக சிஎஸ்இ பிரிவை 7,716 மாணவ, மாணவிகளும், இஇஇ பிரிவை 6,785 பேரும், சிவில் பிரிவை 6,652 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர்.
மென்பொருள் துறைகளில் நிலையற்ற தன்மை நிலவுவதும், மெக்கானிக்கல் முடிப்பவர்களுக்கு பரவலான வேலைவாய்ப்பு கிடைப்பதுமே இதற்கு காரணம் என்கின்றனர் பேராசிரியர்கள்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியது:
வேலைவாய்ப்புகள் அதிகம் இருப்பதனாலேயே தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மெக்கானிக்கல் பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்து வருகின்றனர்.
ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி பெற்று வருவதும் இதற்கு ஒரு காரணம். மென்பொருள் நிறுவனங்கள்கூட மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. அதுபோல் ரயில்வே உள்ளிட்ட அரசு துறைகளிலும் மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதும் முக்கியக் காரணமாகும் என்றனர்.

Tuesday, June 30, 2015

இன்ஜி., மாணவர்களுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு பிளஸ் 1 பாடம்


'இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்த வேண்டும்' என, கல்லுாரி பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிப்படிப்பை முடித்து, புதிதாக பொறியியல் கல்லுாரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு, எப்படி பாடம் நடத்த வேண்டும்; அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, பேராசிரியர்களுக்கு, அண்ணா பல்கலையில், 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற. முன் தயாரிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 590 கல்லுாரிகளின், 2,000 பேராசிரியர் பங்கேற்றுள்ளனர். அப்போது, 'புதிதாக இன்ஜினியரிங் படிக்க வரும் மாணவர்களுக்கு, அடிப்படை கணித, இயற்பியல், வேதியியல் பாடங்கள் சரியாக தெரியவில்லை' என, பேராசிரியர்கள் பலர் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு முடித்து, மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பிளஸ் 1 வகுப்பை பெயரளவிலோ அல்லது தேர்ச்சிக்காக மட்டுமோ படித்து விட்டு, இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடங்களையே படிக்கின்றனர். இதனால், இன்ஜினியரிங் வந்த பின், தடுமாறுகின்றனர்.
இன்ஜினியரிங் படிப்பில், முதல் ஆண்டில், பிளஸ் 1 பாடங்கள் அடிப்படையிலேயே, அதிக பாடங்கள் இருக்கும். பிளஸ் 1 படிப்பு இன்ஜினியரிங்குக்கு மிக முக்கியம். அதை சரியாகப் படிக்காமல் வருவதால், முதல் செமஸ்டரிலேயே தேர்ச்சி அடையாத சூழல் உள்ளது.
எனவே, இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடம் நடத்த அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நாளை பொது கவுன்சிலிங் துவக்கம்அண்ணா பல்கலையின் இன்ஜி., மாணவர் சேர்க்கை விளையாட்டுப் பிரிவு கவுன்சிலிங், நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. இதில், மொத்தமுள்ள, 3 சதவீத ஒதுக்கீடான, 5,137 இடங்களுக்கு, 219 பேர் அழைக்கப்பட்டனர்; 163 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
நேற்று மாலை, 7:00 மணியுடன், இந்த கவுன்சிலிங் முடிந்தது. இந்த பிரிவில் மீதமுள்ள, 5,000 இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படும். பொதுப்பிரிவு கவுன்சிலிங், நாளை துவங்குகிறது; வரும், 28ம் தேதி முடிகிறது.

Saturday, June 27, 2015

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை துவக்கம்:இன்று'சிவில்' படிப்பு

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை துவக்கம்:இன்று'சிவில்' படிப்பு
பி.எஸ்சி., பாலிடெக்னிக் முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான 'கவுன்சிலிங்' காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் நேற்று தொடங்கியது. ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. 91 ஆயிரத்து 371 இடங்கள் காலியாக உள்ளன.
இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அழைப்பு கடிதம், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. முதல் நாளான நேற்று காலை 9 மணிக்கு விளையாட்டு வீரர்களுக்கும், 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும், மாலை நான்கு மணிக்கு 'கெமிக்கல்', 'லெதர்', 'பிரிண்டிங்' பிரிவுகளை எடுக்கும் மாணவர்களுக்கான 'கவுன்சிலிங்' நடந்தது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 993 இடங்களுக்கு 50 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர். இவர்களில் 44 பேர் பங்கேற்றனர். முன்னாள் ராணுவவீரர் வாரிசுதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 இடங்களில் 23 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 இடங்களுக்கு, 16 மாணவர்கள் பங்கேற்றனர். 'பிரிண்டிங்' பிரிவில் 4 இடங்களுக்கு 2 பேரும், 'கெமிக்கல்' பிரிவில் 125 இடங்களுக்கு 100 பேரும், 'லெதர்' பிரிவில் மூன்று பேரும் பங்கேற்று, சேர்க்கை கடிதம் பெற்றனர். இன்று பொதுப்பிரிவான சிவிலுக்கும், 30-ம் தேதி மெக்கானிக்கல், ஜூலை 5-ம் தேதி எலக்ட்ரிக்கல் பிரிவுக்கும் 'கவுன்சிலிங்' நடக்கிறது. 9-ம் தேதி பிளஸ் 2-வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்த, பி.எஸ்சி., மாணவர்களுக்கும் 'கவுன்சிலிங்' நடக்கிறது. ஏற்பாடுகளை நேரடி சேர்க்கை செயலாளர் மாலா, ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்திருந்தனர்

Wednesday, June 24, 2015

அரசு எம்.பி.பி.எஸ்.; 1,672 மாணவர்கள் தேர்வு: காத்திருப்போர் பட்டியலில் 313 மாணவர்கள்


சென்னையில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர கடந்த 5 நாள்களில் மொத்தம் 1,672 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப, ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது.
வேகமாக நிரம்பும் அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களும் கடந்த 5 நாள்களில் நிரம்பி விட்டன.
சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி), அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.
காத்திருப்போர் பட்டியல்: கலந்தாய்வின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, கட்-ஆஃப் மதிப்பெண் 197.00-இல் தொடங்கி 196.50 வரை எடுத்திருந்த மொத்தம் 656 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வுக்கு 47 மாணவர்கள் வரவில்லை; இதையடுத்து கலந்தாய்வில் பங்கேற்ற 599 மாணவர்களில், 125 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களை 180 மாணவர்கள் தேர்வு செய்தனர்.
சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரி பி.டி.எஸ். இடங்களை 33 மாணவர்கள் தேர்வு செய்தனர். உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக எந்த மாணவருக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை.
தாங்கள் விரும்பிய அரசு மருத்துவக் கல்லூயில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காத 261 மாணவர்கள் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 313 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தொடரும் கலந்தாய்வு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 585 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 253 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 36 பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து புதன்கிழமை (ஜூன் 24) கலந்தாய்வு நடைபெற உள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என கட்-ஆஃப் மதிப்பெண் 196.50-இல் தொடங்கி கட்-ஆஃப் மதிப்பெண் 192.00 வரை எடுத்துள்ள மாணவர்கள் புதன்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர்.
345 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
சென்னையில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில், கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 345 பழைய மாணவர்கள் இதுவரை தேர்வாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், கலந்தாய்வில் தினமும் பழைய மாணவர்கள் குறித்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) 84 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; கடந்த 5 நாள்களில் மொத்தம் 345 பழைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 4,679 மாணவர்களில், 548 பழைய மாணவர்களுக்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர். தொடர்ந்து புதன்கிழமை (ஜூன் 24), வியாழக்கிழமை (ஜூன் 25) ஆகிய இரண்டு நாள்கள் கலந்தாய்வு நடைùபெற உள்ளது

Sunday, June 21, 2015

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: நெய்வேலி பள்ளி மாணவர்கள் 21 பேர் தேர்ச்சி


இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி.) பயில்வதற்கான ஐ.ஐ.டி.- ஜே.இ.இ. தேர்வில், நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனமும், தெலுங்கு கலா சமிதியும் இணைந்து மத்திய பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளியை நடத்தி வருகின்றன. இப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு ஒருங்கிணைந்த முறையில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பயில இடம் பெறுகின்றனர்.
தமிழகத்தில் முதலிடம்: இப்பள்ளியில் 2007-ஆம் ஆண்டு முதல் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்து வெளியேறிய மொத்த மாணவர்கள் 355 பேரில் 284 பேர் ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பள்ளியும் இதுபோன்ற சாதனையை செய்ததில்லை.
சிறப்பு நிபுணர்கள்: ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குப் பயிற்றுவிக்கும் சிறப்பு அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இந்தப் பள்ளியில் பணியாற்றுகின்றனர். புதுதில்லி, விஜயவாடா, கோட்டா, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்கான நிபுணர்கள் வந்து பயிற்சி அளிக்கின்றனர். மேலும், இப்பள்ளி மாணவர்கள், தங்களது பாடம் சார்ந்த சந்தேகங்களை காணொலிக் காட்சி மூலம், நாட்டின் தலைசிறந்த நிபுணர்களுடன் உரையாடி விளக்கம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு பிரபல கல்வி நிறுவனங்கள் வழங்கும் பாடக்குறிப்புகள் பயன்படுத்தப்படுவதுடன், நுழைவுத் தேர்வுக்கு முந்தைய நிலையில், மாணவர்களுக்கு புத்துணர்வு வழங்கும் வகையில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் நிபுணர்களைக் கொண்டு இறுதிக்கட்ட அதிவிரைவு திருப்புதல் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இரண்டு கட்டத்தேர்வு: ஐ.ஐ.டி.யில் மாணவர்களைத் தேர்வு செய்ய இரண்டு கட்ட தேர்வுமுறை கடந்த ஆண்டு முதல் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத்தேர்வு 4.4.2015-ல் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ள, சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வுபெற்றனர்.
இதில், நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் 68 பேர் தேர்வு எழுதினர். 51 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இறுதிக்கட்டத் தேர்வு மே 24-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் 21 பேர் வெற்றிபெற்று ஐ.ஐ.டி.யில் பயிலத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 5:2 என்ற சதவிகிதத்தில் தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராட்டு விழா: ஐ.ஐ.டி.யில் பயில தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நெய்வேலி, தெலுங்கு கலா சமிதியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன், தகுதி பெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டினார்.
மேலும், ஜவகர் பள்ளியின் முதல்வர் என்.யசோதா, துணை முதல்வர் எம்.சேதுமணி, ஆசிரியர்கள், நெய்வேலி தெலுங்கு கலா சமிதியின் பொறுப்பாளர்கள், மாணவர்களுக்கு காணொலிக்காட்சி வசதி செய்து தரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த "ஆல்டிட்யூட் கிளாஸஸ்' நிறுவனத்தின் பிரதிநிதி சந்திரசேகர் ஆகியோரையும் பி.சுரேந்திரமோகன் பாராட்டினார்.

கல்வி உதவித்தொகை நிலுவை : திணறும் இன்ஜி., கல்லூரிகள்


இன்ஜி.,கல்லுாரி மாணவர்களுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை வழங்க தாமதம் ஆவதால், தனியார் கல்லுாரிகள் திணறி வருகின்றன.தமிழகம் முழுவதும் 573 இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லுாரியிலும் 30 சதவீதம் என்ற அளவில், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 70 ஆயிரமும் கல்வி உதவித்தொகையாக தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் பரிந்துரையின் பேரில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. எம்.இ., படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.25 முதல் 30 ஆயிரம் வரையும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், கல்வி கட்டணம், அந்த ஆண்டின் மார்ச்அல்லது ஏப்ரல் இறுதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த மே மாத கடைசி வாரத்தில், மொத்த தொகையில் 30 சதவீதமே வழங்கப்பட்டது. மீதி 70 சதவீதம் என்ற அடிப்படையில், ஒவ்வொரு கல்லுாரிக்கும் ரூ.50 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை நிலுவை உள்ளது.
இந்த தொகையை எதிர்பார்த்தே கல்லுாரிகள், வங்கியில் கடன் பெற்று உள்ளன. கடன் தொகையை செலுத்த, வங்கிகள் கல்லுாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியாமலும், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும் தனியார் கல்லுாரிகள் திணறி வருகின்றன

BE - 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, அரசு பள்ளி மாணவர்


இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, அரசு பள்ளி மாணவர்
இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, 23 பேரில் ஒருவர், அரசு பள்ளி மாணவர். எட்டு பேர், மருத்துவ தர வரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளனர்.
அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங்குக்கான பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்' அடிப்படையிலான, தரவரிசைப் பட்டியலை, உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா நேற்று வெளியிட்டார். பட்டியலில், 23 பேர், 200க்கு 200 'கட் - ஆப்' எடுத்துள்ளனர். இவர்களில், 15 பேரின் பெயர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன.
*குமாரபாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். இவர் தொழிற்கல்வி மாணவர்களின் தர வரிசைப் பட்டியலில், இரண்டாம் இடம்; பிற்படுத்தப்பட்டோர் மாணவர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
* தர வரிசையில், கோவை, சூலுாரைச் சேர்ந்த கீர்த்திபாலன், முதலிடம் பெற்றுள்ளார். இவர், திருச்செங்கோடு வித்ய விகாஸ் பள்ளி மாணவர்.
*சாதனை நிகழ்த்திய நிஷாந்த் ராஜன், முகேஷ் கண்ணன், நிவாஷ், சரவணக்குமார், பிரவின்குமார், மோனிஷ், மோகன்குமார் மற்றும் ராம் அஸ்வந்த் ஆகிய எட்டு பேர் மருத்துவ தர வரிசை பட்டியலிலும் முதலிடம் பெற்றுள்ளனர்; மருத்துவம் படிக்க உள்ளனர்.
*அவினாசி வெள்ளத் தோட்டத்தைச் சேர்ந்த கிரிதரன், ஈரோடு குருகுலம் பள்ளி மாணவர்.
*ஈரோடு மாவட்டம் ஏலவாமலையைச் சேர்ந்த விக்னேஷ்வரன், திருச்செங்கோட்டைச் சேர்ந்த கார்த்திக் ராஜா ஆகியோர், அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி மாணவர்கள்.
*மதுரை பி அண்ட் டி நகரைச் சேர்ந்த மாணவர் சுகைல் அகமது, 199.75 'கட் - ஆப்' எடுத்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இனப் பிரிவிலும்; சேலம் ஆத்துாரைச் சேர்ந்த இசைப்பிரியா, 199.25 எடுத்து, ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவிலும்; கொல்லிமலையைச் சேர்ந்த தனசேகர், 197.50 எடுத்து, பழங்குடியினர் பிரிவிலும் முதலிடம் பெற்றுள்ளனர்.
*தொழிற்கல்விப் பிரிவில், கோவை காராமடையைச் சேர்ந்த மனோஜ், முதலிடம் பிடித்துள்ளார். ஈரோடு, சிக்கரசம் பாளையம் தினேஷ் குமார்; திண்டுக்கல்லைச் சேர்ந்த ரோகிந்த் போஸ் ஆகியோர் முறையே, மூன்று, நான்காம் இடங்களை பெற்றுள்ளனர்.
முழுமையான தர வரிசைப் பட்டியல், அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்ஜி., படிப்புக்கு மாணவியர் 'குட்பை':
இன்ஜி., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள, 1.50 லட்சம் பேரில், 57,990 பேர் மாணவியர். ஆனால், இந்த ஆண்டு தர வரிசைக்கான முதலிடம்பட்டியலில், மாணவியர் மிக சொற்பமாகவே இடம் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:இந்த ஆண்டு பிளஸ் 2வில், உயிரியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால், அந்தப் பாடத்தில், 'சென்டம்' எண்ணிக்கை கடுமையாகக் குறைந்தது.அதனால், 'கட்- ஆப்' மதிப்பெண்ணும் குறைந்து விட்டது. கணிதம், பயாலஜி படித்த மாணவியரில், 195 முதல், 200 வரை, 'கட் - ஆப்' பெற்றவர்கள் மருத்துவம் நிச்சயம் கிடைக்கும் என்று அதற்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதனால், இன்ஜினியரிங் பட்டியலில் அவர்கள் இடம் பெறவில்லை.அதேநேரம், இந்த ஆண்டு இன்ஜி., படிப்பில், 190க்குக் கீழ் அதிக மாணவர்கள், 'கட் - ஆப்' பெற்றுள்ளதால், பாடப்பிரிவு மற்றும் கல்லுாரித் தேர்வில் கடும் போட்டி இருக்கும்.இந்த ஆண்டு, 22,500 பேர், 190 'கட் - ஆப்' பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 21,280 பேர் பெற்றனர்.இந்த ஆண்டு, 28,129 பேர், 188 'கட் - ஆப்' பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 26,300 பேர் தான் பெற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
"
மாணவர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் ஒரே மாதிரியாக இருக்கும் போது, அவர்களை
வரிசைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கலைப் போக்க, 'ரேண்டம்' எண் பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு, 124 பேருக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு, 80 பேருக்கு 'ரேண்டம்' எண் பயன்படுத்தப்படும்
ரைமண்ட் உத்தரியராஜ்
தமிழ்நாடு இன்ஜினியரிங்
மாணவர் சேர்க்கை செயலர்
இன்ஜினியரிங் தர வரிசைப் பட்டியலில், முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே, இயந்திரங்களின் செயல்பாடு மீது, அதிக ஆர்வம் இருந்ததால், மெக்கானிக்கல் பிரிவில் படிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்கு காரணமான, நான் படித்த உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சாருமதிக்கு நன்றி கூற விரும்புகிறேன்

Saturday, June 13, 2015

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது; மாணவர்கள், பெற்றோர்கள் நிற்க பந்தல் அமைக்கும் பணி தீவிரம்


என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிற்க பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரமாக உள்ளது.
என்ஜினீயரிங் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 538 உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பி.இ., பி.டெக். படிப்பில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் வருடந்தோறும் கலந்தாய்வை நடத்தி வருகிறது.
இந்த கலந்தாய்வு ஒரு மாதத்திற்கும் மேலாக திருவிழா போல நடக்கும். மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து மகிழ்ச்சியாக என்ஜினீயரிங் இடங் களை தேர்ந்து எடுத்துச்செல்வார்கள்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்ததா? என்று பார்க்கும் வசதி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ரேண்டம் எண்
மேலும் ரேண்டம் எண் 15-ந் தேதியும், ரேங்க் பட்டியல் 19-ந் தேதியும் வெளியிடப்பட உள்ளது.
ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்களின் விண்ணப்பம் தான் தகுதியானவை ஆகும்.
விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு 28-ந் தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 29-ந் தேதியும் நடைபெற உள்ளது.
பொது கலந்தாய்வு 1-ந் தேதி தொடங்குகிறது
மாணவ-மாணவிகளுக்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில்தான் பெரும்பாலான மாணவ- மாணவிகள் கலந்து கொள்வார்கள். இந்த கலந்தாய்வு ஜூலை 31-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் செய்து வருகிறார்.
கலந்தாய்வு ஏற்பாடு குறித்து பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-
பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்கள் கலந்தாய்வு நடைபெறுவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்கள். அவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்து எடுக்கலாம். எந்த கல்லூரியில் இடம் உள்ளது என்ற விவரம் ஆயிரம் பேர் உட்காரக்கூடிய இடத்தில் திரையில் தெரிவிக்கப்படுகிறது. அந்த இடம் பெரிய கூடாரம் போல அமைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் குடிநீர் வசதி, மின்விசிறிகள் ஆகியவை செய்யப்பட்டு இருக்கும்.
மேலும் கழிப்பிட வசதி போதுமான அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் வரிசையில் நிற்பதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவை அனைத்தும் கலந்தாய்வுக்கு முன்பாக முடிந்துவிடும்.
மாணவ-மாணவிகளுக்கு எந்த வித குறைவும் இல்லாமல் இருக்க கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Friday, June 12, 2015

MBBS "ரேண்டம் எண்" என்றால் என்ன ? எப்போது பயன்படுத்தப்படும்?


எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது ஒரே கட்-ஆஃப் மதிப்பெண், பிளஸ் 2 தேர்வில் உயிரியல் - வேதியியல் பாடங்களிலும் ஒரே மதிப்பெண், நான்காவது பாடமாகக் கருதப்படும் கணிதத்திலும் ஒரே மதிப்பெண், ஒரே பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்ட மாணவர்களை வரிசைப்படுத்த சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.
கடந்த கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை தயாரித்தபோது, 164 மாணவர்கள் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்றிருந்தனர். அவர்களில் மேலே குறிப்பிட்டவாறு அனைத்து ஒப்பீடுகளிலும் சமமாக இருந்த 68 மாணவர்களை வரிசைப்படுத்த கடந்த கல்வி ஆண்டில் சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது.
அதேபோல இந்த ஆண்டும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களை வரிசைப்படுத்த இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்படும். எனவே, எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை ஜூன் 15-இல் வெளியிடும்போது, நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) எத்தனை மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவரும் என்று டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.
ஜூன் 15-இல் தரவரிசைப் பட்டியல்: மறு கூட்டல், மறு மதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பிதுள்ள பிளஸ் 2 மாணவர்களின் உயிரியல் - வேதியியல் - இயற்பியல் உள்ளிட்ட பாடங்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி.யை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலை அளிப்பதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சி.டி. கிடைத்தவுடன் மாணவர்களின் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் இரண்டு நாள்களில் தயாரிக்கப்படும்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு வரும் 19ம் தேதி துவக்கம் :நடைபெறும் இடம் ஓமந்தூரார் கல்லூரிக்கு மாற்றம்


இதுவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரியில் நடைபெற்று வந்த, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கலந்தாய்வு, இந்த ஆண்டு முதல், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. முதற்கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான, 'ரேண்டம்' எண் வெளியீடு, சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நேற்று நடந்தது.'ரேண்டம்' எண் விவரத்தை, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் ஆகியோர் வெளியிட்டனர். பின், அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:விண்ணப்பித்த அனைவருக்கும், 'ரேண்டம்' எண் தரப்பட்டுள்ளது. www.tnhealth.org என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்தால், 'ரேண்டம்' எண் விவரம் அறியலாம்.
இந்த ஆண்டில், 20வது அரசு மருத்துவக் கல்லுாரியாக, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி இணைந்துள்ளது. இதனால், எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,655 ஆக உயர்ந்துள்ளது.இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக, மீதம், 2,557 இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்கிறது. அரசு கல்லுாரியில், 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, 780 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,432 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன.
வரும், 15ம் தேதி, தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான, முதற்கட்ட கலந்தாய்வு, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், 19ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடக்கும். முதற்கட்ட கலந்தாய்வில், சுய நிதி கல்லுாரிகளின், பி.டி.எஸ்., இடங்கள் இடம்பெறாது.இவ்வாறு, அவர் கூறினார்.
எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நீண்ட காலமாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் தான் நடந்து வந்தது. தற்போது, போதிய வசதிகளுடன், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி அமைந்துள்ளதால், கலந்தாய்வு இங்கு மாற்றப்பட்டுள்ளது.

முதல் கட்டக் கலந்தாய்வு: அரசு, சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு?


தமிழகத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் 2,257 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும், 551 சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட உள்ளன. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வரும் 19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், கோவை பி.எஸ்.ஜி. உள்பட 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 551 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் இந்தக்க கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களும் முதல் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. முதல் கட்டக் கலந்தாய்வில் இடம்பெறும் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் குறித்த விவரம் (பட்டியல்):
20 அரசு மருத்துவக் கல்லூரிகள்- 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள்
கல்லூரியின் பெயர் மொத்த இடங்கள் தமிழக ஒதுக்கீடு அகில இந்திய
ஒதுக்கீடு
1 சென்னை ஓமந்தூரார் 100 85 15
2 சென்னை (எம்எம்சி) 250 212 38
3 ஸ்டான்லி 250 213 37
4 கீழ்ப்பாக்கம் 150 128 22
5 செங்கல்பட்டு 100 85 15
6 மதுரை 155 132 23
7 தஞ்சாவூர் 150 127 23
8 கோவை 150 128 22
9 திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் 150 128 22
10 சேலம் மோகன் குமாரமங்கலம் 100 85 15
11 திருநெல்வேலி 150 127 23
12 தூத்துக்குடி 150 127 23
13 கன்னியாகுமரி 100 85 15
14 வேலூர் 100 85 15
15 தேனி 100 85 15
16 தர்மபுரி 100 85 15
17 விழுப்புரம் 100 85 15
18 திருவாரூர் 100 85 15
19 சிவகங்கை 100 85 15
20 திருவண்ணாமலை 100 85 15
8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்- 551 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
கல்லூரியின் பெயர் ஒதுக்கீடு
1 சென்னை தாகூர் 75
2 பி.எஸ்.ஜி. கோவை 97
3 கற்பகம், கோவை 75
4 ஐ.ஆர்.டி, ஈரோடு 39
5 கற்பக விநாயகா,
மதுராந்தகம் அருகில் 65
6 வேலம்மாள், மதுரை 75
7 தனலட்சுமி சீனிவாசன்,
பெரம்பலூர் 75
8 ஸ்ரீ மூகாம்பிகை,
குலசேகரம், கன்னியாகுமரி 50

Thursday, June 11, 2015

வரும் 15ல் இன்ஜி., கவுன்சிலிங் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தொழிற்கல்வி மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி, வரும், 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 580 அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, அண்ணா பல்கலை மூலம் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 1.53 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன், 28ம் தேதி விளையாட்டுப் பிரிவினர்; 29ம் தேதி மாற்றுத் திறனாளிகள்; ஜூலை, 1ம் தேதி முதல் பொதுக் கவுன்சிலிங் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும் கவுன்சிலிங் தேதி இதுவரை அறிவிக்கவில்லை. இதுகுறித்து அண்ணா பல்கலை பேராசிரியரும், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலருமான ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது, ''தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி, இன்னும் முடிவு செய்யவில்லை. வரும், 15ம் தேதி, 'ரேண்டம்' எண் வெளியிடப்படும். அப்போது, தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்,'' என்றார்.
அண்ணா பல்கலை ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கையில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 100 இடங்கள் ஒதுக்கப்படும். தனியார் சுயநிதி இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 4 சதவீதம் ஒதுக்கப்படும்.

இன்று எம்.பி.பி.எஸ்., 'ரேண்டம்' எண் வெளியீடு


தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியையும் சேர்த்து, 20 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரி உள்ளன. 2,655 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
அகில இந்திய ஒதுக்கீடாக, 15 சதவீத இடங்கள் போக, மற்ற இடங்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், கலந்தாய்வு நடத்தி மாணவரை சேர்க்க உள்ளது. இதற்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. பலர் ஒரே மாதிரியான, 'கட் - ஆப்', பிறந்த தேதி, பாடவாரியாக மதிப்பெண் என, எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு. அப்படியான சூழலில், அவர்களில், யாரை முன்னிலைப்படுத்துவது என்பதற்கான, 'ரேண்டம்' எண், இன்று வெளியிடப்படுகிறது.பிளஸ் 2 மறு கூட்டலுக்கான முடிவுகள் குறித்த, 'சிடி' இன்று, பள்ளிக் கல்வித் துறை தர உள்ளது. இதைத் தொடர்ந்து, 14ம் தேதி, தர வரிசை பட்டியலை வெளியிடவும், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வை நடத்தவும், மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

Tuesday, May 26, 2015

பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு: 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்


பொறியியல் கல்லூரிகளின் 2014-ஆம் ஆண்டு இரு பருவத் தேர்வுகளின்மாணவர் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 525 இணைப்புப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் w‌w‌w.a‌n‌na‌u‌n‌i‌v.‌e‌d‌u இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மேற்கொண்டுள்ளது.2014-ஆம் ஆண்டு ஏப்ரல்- மே, நவம்பர்- டிசம்பர் ஆகிய இரு பருவத் தேர்வுகளின் (செமஸ்டர்) மாணவர் தேர்ச்சி விகிதங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
அதிர்ச்சி அளிக்கும் விவரம்:
இந்தத் தேர்ச்சி விகிதப் பட்டியலின் அடிப்படையில், சில கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் தேர்ச்சி விகிதம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தஞ்சையிலுள்ள ஒரு தனியார் கல்லூரி இரு பருவத் தேர்வுகளிலும் மிகக் குறைந்ததேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. ஏப்ரல்- மே தேர்வில் 4.58 சதவீத தேர்ச்சியையும், நவம்பர்- டிசம்பர் பருவத் தேர்வில் 3.02 சதவீத தேர்ச்சியையும் இந்தக் கல்லூரி பெற்றிருக்கிறது. இந்தக் கல்லூரியில் நவம்பர்- டிசம்பர் பருவத் தேர்வை எழுதிய 563 பேரில் 17 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக விழுப்புரத்தைச் சேர்ந்த கல்லூரியில் 231 பேர் தேர்வெழுதி14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுபோல, மொத்தம் 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்க தேர்ச்சி விகிதம் உள்ளது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி 96.95 மாணவர் தேர்ச்சி விகிதத்துடன் 2014 ஏப்ரல்- மே பருவத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது. கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 98.33 தேர்ச்சி விகிதத்துடன் நவம்பர்- டிசம்பர் பருவத் தேர்வில் முதலிடம் பிடித்திருக்கிறது.இந்தப் பட்டியலின்படி 5 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே 90 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருக்கின்றன.
20 கல்லூரிகள் 80 சதவீதத்துக்கு மேலும், 37 கல்லூரிகள் 70 சதவீதத்துக்கு மேலும், 74 கல்லூரிகள் 60 சதவீதத்துக்கு மேலும், 85 கல்லூரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் மாணவர் தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.மீதமுள்ள 309 பொறியியல் கல்லூரிகளிலும் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர் தேர்ச்சி விகிதப் பட்டியல் பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரம் குறித்து அறிந்துகொள்ள மாணவர்களுக்கு ஓரளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்


பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் படிவங்கள் மே 6-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ-மாணவிகள் ஆர்வத்தோடு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.
நேற்றைய நிலவரப்படி, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 13 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மாணவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்ற விவரத்தை இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2015) தெரிந்துகொள்ளலாம்.

Tuesday, May 19, 2015

பி.இ. சேர்க்கை: 10 ஆயிரம் பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு:இதுவரை 1.75 லட்சம் விநியோகம்


பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், திங்கள்கிழமை வரை 10 ஆயிரம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே நேரம், விண்ணப்ப விநியோகம் 1.75 லட்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1.80 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்களில், 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது.முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கும், ஜூன் 29-இல் மாற்றுத் திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.பொதுப் பிரிவு கலந்தாய்வை ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதியில் முடிக்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது.
பிற மையங்களில் மே 27-ஆம் தேதி வரையிலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 60 மையங்களில் திங்கள்கிழமை மாலை 5 மணி வரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 714 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும்.அதன்படி, விண்ணப்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 10 ஆயிரம் பேர் சமர்ப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.விண்ணப்பங்களை www.annauniv.edu என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்தும், பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

Friday, May 15, 2015

பிளஸ் 2 விடைத்தாள் நகல்: ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்


பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு பள்ளிகளில் இணையம் மூலம், 1.09 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய முக்கிய பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்தது.
எனவே எம்.பி.பி.எஸ்.- பி.இ. படிப்பில் சேருவதற்கு தாங்கள் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைந்ததால், விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், பள்ளிகளில் இணையம் மூலம் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பணி மே 8-ஆம் தேதி தொடங்கி மே 14-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதும் சுமார் 1.09 லட்சம் மாணவர்கள் விடைத்தாள் நகல் (scan copy) கோரியும், மறுகூட்டல் செய்யக் கோரி 1880 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 87 ஆயிரம் பேர் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Wednesday, May 13, 2015

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பம்


டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதும் 34 மையங்களில் (அரசுப் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள்) இன்று முதல் ஜூன் 9 வரை வழங்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வழங்கப்படும். ஜூன் 9 மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.டிப்ளமோ மாணவர்களை பொறுத்த வரை, கடந்த ஆண்டுகளில் கடைசி இரண்டு பருவத் தேர்வுஅடிப்படையில், 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இந்த ஆண்டு, ஆறு பருவ தேர்வு முடிவு அடிப்படையில் 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம் ரூ.300; ஆதிதிராவிடர்களுக்கு இலவசம். முதற்கட்டமாக 35 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'செயலர், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, காரைக்குடி' என்ற முகவரிக்கு தபால் அல்லது நேரில் அனுப்பலாம். ''பி.எஸ்சி., யில் கணிதம் மற்றும் கணிதத்தை துணைப் பாடமாக எடுத்தவர்கள் மட்டுமே இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு பிளஸ் 2வில் கணித பாடம் எடுத்து, பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல் படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்'' என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளர் மாலா தெரிவித்தார்.

ஒரே பெயரில் 460 கல்லூரிகள்: பட்டியல் வெளியிட்டது அண்ணாபல்கலை


மாணவர்களைக் குழப்பும் விதமாக, ஒரே பெயர் கொண்டுள்ள, 460 கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. கவுன்சிலிங்கின் போது, கல்லூரிகளின் பெயரை விட, கல்லூரிக் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர், பொறியியல் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையில், ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தனியார் சுயநிதிப் பல்கலைகள் தவிர, 570 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பின் கீழ் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் சேர, அண்ணா பல்கலை மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலையில், ஜூன் 28ம் தேதிமுதல், கவுன்சிலிங் துவங்குகிறது; ஜூலை, 1ம் தேதி பொது கவுன்சிலிங் நடத்தப்படும். இந்நிலையில், உயர்தர வரிசையிலுள்ள கல்லூரிகளைப் போன்று, பல கல்லூரிகளுக்கு பெயர் வைத்துள்ளனர்.
இதனால், கவுன்சிலிங்கின் போது மாணவர்கள்,தரமற்ற அல்லது ஒரே பெயரிலுள்ள, வேறு கல்லூரியை குழப்பத்தில் தேர்வு செய்து, சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். எனவே, ஒரே பெயரிலான கல்லூரிகளின் பட்டியலை,அண்ணா பல்கலை தனியாக வெளியிட்டு உள்ளது; இதில், 460 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன. பெரும்பாலான கல்லூரிகளின் பெயர்கள், ஒரே மாதிரியாக இருக்கின்றன; அதனால், கல்லூரிகளின் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப வினியோகம் துவக்கம்: ஜூன் 19ல் முதற்கட்ட கலந்தாய்வு?'கட் - ஆப்' குறைகிறது


தமிழகம் முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. ''ஜூன், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது,'' என, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீதம் இடங்கள் போக, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 85 பி.டி.எஸ்., இடங்கள் மாநிலத்திற்கு கிடைக்கிறது. இந்திய மருத்துவக் கவுன்சிலிங் அனுமதிக்கு ஏற்ப, சுயநிதி கல்லூரிகளில் இருந்தும் இடங்கள் கிடைக்கும். இந்த இடங்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.
சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், விண்ணப்ப வினியோகத்தை, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி துவக்கி வைத்து கூறியதாவது:
அரசின், 19 மருத்துவக் கல்லூரிகள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், விண்ணப்பங்கள், 28ம் தேதி வரை கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 29க்குள் கிடைக்க வேண்டும். தர வரிசைப் பட்டியலை, ஜூன், 12ம் தேதி வெளியிடவும்; முதற்கட்ட கலந்தாய்வை, ஜூன், 19ம் தேதி துவக்கவும் திட்டமிட்டு உள்ளோம். மறு கூட்டல் முடிவுகள் கிடைக்க தாமதமானால், இதில் மாற்றம் வரும். கடந்த ஆண்டு, வினியோகிக்கப்பட்ட, 30,380 விண்ணப்பங்களில், 28,053 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. இதில், 27,907 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரிக்கு, சில நாட்களில் அனுமதி கிடைக்கும் என, நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.முதல் நாளில், 9,238 விண்ணப்பங்களை, மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 1,406 விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன. இம்மாதம், 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
'கட் - ஆப்' குறைகிறது:
பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண்ணை நிர்ணயிக்கும், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், கடந்த ஆண்டைவிட, 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், 'கட் - ஆப்' மதிப்பெண், கடந்த ஆண்டை விட குறைகிறது

Sunday, May 10, 2015

என்ஜினீயரிங் கல்லூரிகளின் கடந்த ஆண்டு கட்–ஆப் மார்க் விவரம் வெளியீடு


என்ஜினீயரிங் கல்லூரிகளின் கடந்த ஆண்டு கட்–ஆப் மார்க் விவரம்: அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு
2015–16–ம் ஆண்டிற்கு பொறியியல் படிப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜூலை 1–ந்தே
தி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் நலன் கருதி கடந்த ஆண்டு பொறியியல் கட்–ஆப் மார்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிகளிலும் பாடப்பிரிவுகளுக்கு குறைந்தபட்ச கட்–ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வசதியாக முழு விவரங்களைwww.tnea.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். கட்–ஆப் மார்க் குறைவதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு!!


பிளஸ்–2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வருடம் பிளஸ்–2 உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் 200–க்கும் 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும்.
இதனால் மருத்துவ கட்–ஆப் மார்க் 0.5 அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200–க்கு 200 கட்–ஆப் மதிப்பெண் 132 மாணவர்கள் எடுத்து இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 200–க்கு 200 மதிப்பெண் 5 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.
மேலும் 200–க்கு 199.75 கட்–ஆப் மதிப்பெண்ணில் தொடங்கி 199 வரை கட்–ஆப் மதிப்பெண் போட்டி குறைவாக இருக்கும்.
200–க்கு 199–க்கு கீழே 198.75 முதல் 197.75 வரை வழக்கமான கட்–ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்படும்.
இந்த ஆண்டு 197.5 கட்–ஆப் மதிப்பெண் எடுத்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் போன 1266 மாணவர்கள் இந்த வருடம் சேர முயற்சி செய்கின்றனர். மருத்துவ கட்–ஆப் மார்க் குறைவதால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
இவர்களில் பலர் என்ஜினீயரிங், பல் மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளை தேர்வு செய்து ஒரு ஆண்டு படித்து வந்த போதிலும் ஒரு மார்க் 0.5 கட்–ஆப்பில் அரசு மருத்துவ கல்லூரி வாய்ப்பை இழந்தவர்கள்.
அதனால் பழைய மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே தற்போது பிளஸ்–2 முடித்துள்ள மாணவர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை உறுதி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே 197.50 கட்–ஆப் மார்க் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பழைய மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமைந்துள்ளது.
400 பழைய மாணவர்கள் இந்த வருடம் மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொறியியல் படிப்பை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 9710 மாணவர்கள் கணிதத்தில் 200–க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 200–க்கு 198 மதிப்பெண் 15 ஆயிரம் மாணவர்கள் எடுத்துள்ளனர்.
பொறியியல் படிப்புக்கு உரிய இயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண்ணை, பிரதான கணிதப் பாடத்தில் மாணவர்கள் எடுத்துள்ள அதிக மார்க் சமன் செய்து விட்டது.
இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பி.இ, கட்–ஆப் 200–க்கு 0.25 மதிப்பெண் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Saturday, May 9, 2015

பி.இ., பி.டெக்., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள்


பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, கடந்த ஆண்டுகளில், டிப்ளமோ படிப்பின் ஐந்து மற்றும் ஆறாம் பருவ தேர்வு மட்டுமே கணக்கிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒன்று முதல் ஆறு பருவ தேர்வு முடிவு மதிப்பெண் அடிப்படையிலேயே ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்” என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளர் மாலா தெரிவித்தார்.

டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி., முடித்தவர்கள் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 34 மையங்களில், வருகிற 13 முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி.,கல்லூரியில் ஜூன் கடைசி வாரத்தில் தொடங்கி, ஜூலை 2வது வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து, ஒரு லட்சம் இடங்கள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டன. 28 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இந்த ஆண்டு 630 கல்லூரிகள் உள்ளதால் 1.25 லட்சம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 35 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை செயலர் மாலா கூறியதாவது: விண்ணப்பங்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். கடந்த ஆண்டுகளில் டிப்ளமோ படிப்பின் கடைசி ஐந்து, ஆறு பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு முதல் அனைத்து பருவ தேர்வு முடிவுகளையும் கணக்கில் கொண்டு, ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். எனவே மாணவர்கள் விண்ணப்பத்தை அனுப்பும்போது, அவர்களது ஆறு பருவ தேர்வு முடிவுகளின் சான்று நகலை அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் ஜூன் 13ம் தேதி. விண்ணப்பங்களை செயலர், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லூரி, காரைக்குடி என்ற முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ அனுப்பலாம்.
பி.எஸ்.சி., கணிதம், கணிதத்தை துணை பாடமாக எடுத்தவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிளஸ் 2வில் கணித பாடம் படித்தவர்கள், பி.எஸ்.சி.,யில் தாவரவியல், விலங்கியல் எடுத்திருந்தாலும் அவர்களும் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமன்றி, கடந்த ஆண்டு அவர்கள் கவுன்சிலிங்கிற்கு முதலில் அழைக்கப்பட்டனர்.
இதனால் அவர்களுக்கு 900 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு கிடைத்தது. இந்த ஆண்டு, அவர்களுக்கு டிப்ளமோ மாணவர்களுக்கு பிறகு, கடைசியில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. எனவே கூடுதல் இடங்கள் கிடைக்கும். திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ஆண், பெண் இருபாலர் பயிலும் கல்லூரியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். சான்றிதழ் நகல்களில் அரசு அலுவலர் சான்று ஒப்பம் தேவையில்லை. மாணவரின் சுய சான்றொப்பமே போதும். இணையதள முகவரி www.accet.edu.com என மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Wednesday, May 6, 2015

பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்கும்

பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்கும்
Ariyalur
University College
of Engineering,
Ariyalur – 621 704.
Centre for Entrance
Examinations & Admissions,
Anna University, Chennai – 600 025.
Madras Institute of
Technology,
Chennai
Chrompet, Chennai – 600
044.
Government
Polytechnic College,
Purasawalkam, Chennai – 600012.
Bharathi Govt. Women’s
College (Autonomous),
Broadway, Chennai – 600 108.
Regional Office –
Anna University, Coimbatore
Region, Jothipuram,
Coimbatore – 641 047.
Government College
of Technology,
Coimbatore
Thadagam Road, Coimbatore –641 013.
Government
Polytechnic College for Women,Gandhipuram, Coimbatore – 641044.
Government Polytechnic College for Men, Aerodrome Post, Coimbatore – 641014.
Padalesuwarar Polytechnic
College Cuddalore – 607 001.
Cuddalore
Muthiah Polytechnic
College, Annamalai Nagar,
Chidambaram – 608 002.
University College
of Engineering,
Panruti – 607 106.
Dharmapuri
Government Arts
College,Dharmapuri –
636 705.
University College
of Engineering,
Dindigul – 624 622.
Arulmigu Palani Andavar Polytechnic College for
Men, Palani– 624 601.
Institute of Road
and Transport Technology, Erode– 638 316.
Chikkaiah Naicker College, Erode – 638 004.
University College
of Engineering,
Kancheepuram – 631 552.
Rajeswari Vedachalam Govt. Arts College,
Chengalpet – 603 001.
University College
of Engineering,
Kanyakumari
Konam – 629 004.
Pioneer Kumarasamy College,Nagercoil – 629 003.
Karur
Government Arts
College (Autonomous),
Karur – 639 005.
Government Arts
College for Men,
Krishnagiri – 635 001.
Government College of Engineering,Bargur –
635 104.
Thiagarajar College of
Engineering, Madurai –
625 015.
Madurai Tamil Nadu
Polytechnic College,
Madurai – 625 011.
Sri Meenakshi Govt. College for Women (Autonomous), Madurai – 625 002.
Nagapattinam
ADJ Dharmambal Polytechnic College,
Nagapattinam – 611 001.
Namakkal N.K.R. Government
Arts College for Women,
Namakkal – 637 001.
Perambalur Sri Saradha College for Women,
Perambalur – 621 113.
Govt. Arts College
for Women (Autonomous),
Pudukkottai – 622 001.
Government Polytechnic College, Aranthangi – 614 616.
Ramanathapuram
Government Arts
College for Women,
Ramanathapuram – 623 501.
Government College
of Engineering, Salem –
636 011.
Salem Government Arts
College for Women,
Salem – 636 008.
Arignar Anna Government
Arts College, Athur 636 121.
Government Arts
College for Women,
Sivagangai – 630 561.
A.C. College of
Engineering & Technology,
Karaikudi – 630 004.
Kunthavai Naacchiyaar Govt. Arts College for
Women (Autonomous),
Thanjavur – 613 007.
Government Arts
College (Autonomous)
Kumbakonam – 612 001.
The Nilgiris
Government
Polytechnic College,
The Nilgiris– 643 006.
Thangam Muthu Polytechnic College, Theni
Periyakulam – 625 604.
Cardamom Planters
Association College,
Bodinayakanur – 625 513.
Tiruvallur
Murugappa Polytechnic
College, Avadi, Chennai – 600062.
Tiruvannamalai
Government Arts College,
Tiruvannamalai – 606 603.
Tiruvarur Thiru-vi-ka Government Arts College,
Tiruvarur – 610 003.
University VOC
College of Engineering,
Thoothukudi – 628 008.
B.C.M. Government
Polytechnic College for
Women, Ettayapuram
– 628 902.
Regional Office –
Anna University, Tirunelveli
Tirunelveli Region, Tirunelveli – 627 007.
Rani Anna
Government College for Women Tirunelveli – 627 008.
Tiruppur LRG Government Arts College for Women,
Tiruppur – 641 604.
Jamal Mohammed
College, Tiruchirappalli –
620 020.
Tiruchirappalli
Government
Polytechnic College,
Tiruchirappalli – 620 022.
Regional Office
Anna University,
Tiruchirappalli Region

Saturday, May 2, 2015

எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்: தவறான கேள்விக்கு ‘மைனஸ் மார்க்’ வழங்க புதிய முறை


எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிடி படிப்புகளுக்காக நடத்தப்படும் ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பித் துள்ளனர். நுழைவுத் தேர்வில் தவறான கேள்விக்கு மைனஸ் மார்க் வழங்குவதில் இந்த ஆண்டு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தமிழ்நாட்டில் முதுநிலை பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளிலும் (எம்இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான்) எம்பிஏ, எம்சிஏ படிப்புகளிலும் சேர ‘டான்செட்’ எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு நடத் தப்படுகிறது.
இந்த ஆண்டு எம்சிஏ படிப் புக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மே 16-ம் தேதிகாலையும், எம்சிஏ நுழைவுத்தேர்வு அன்றைய தினம் மதியமும், எம்இ, எம்டெக், எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மே 17-ம் தேதி காலையும் நடைபெற உள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் இந்த தேர்வுகளை நடத்துகிறது.டான்செட் நுழைவுத் தேர் வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் (மாணவர் சேர்க்கை) பேராசிரியர் ஜி.நாகராஜன் கூறி யதாவது:டான்செட் நுழைவுத் தேர் வுக்கு இந்த ஆண்டு 40 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். டான்செட் நுழைவுத்தேர்வு தமி ழகம் முழுவதும் 86 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டு உள்ளிட்டவை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுகுறித்து விண்ணப்ப தாரர்களுக்கு விளக்கம் அளிக்க ஒவ்வொரு தேர்வு மையத்திலும் மே 15-ம் தேதி அன்று தகவல் மையம் இயங்கும். அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையத்தில் மட்டும் மே 14, 15 இரு நாட்கள் அந்த மையம் செயல்படும்.டான்செட் நுழைவுத் தேர்வில் தவறாக அளிக்கப்படும் விடை களுக்கு மைனஸ் மார்க் வழங்கப்படும். கடந்த ஆண்டு வரையில் 4 கேள்விகளுக்கு தவறாக விடை அளித்திருந்தால் ஒரு மதிப்பெண் மைனஸ் செய்யப்பட்டு வந்தது.இந்த ஆண்டு, ‘மேட்’ உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளைப் போன்று 3 கேள்விகளுக்கு தவறாக பதில் அளித்திருந்தால் 1 மதிப்பெண் மைனஸ் செய்யப்படும்.இவ்வாறு பேராசிரியர் நாகராஜன் கூறினார்

இன்ஜி., தரவரிசை பட்டியல் ஜூனில் வெளியீடு


பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, ஜூன் முதல் வாரத்தில், அண்ணா பல்கலை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போலி தர வரிசைப் பட்டியல்களை நம்ப வேண்டாம் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், வரும் 6ம் தேதி முதல், சென்னை அண்ணா பல்கலை உட்பட, தமிழகம் முழுவதும், 60 மையங்களில் வழங்கப்படுகின்றன. மொத்தம், 2.40 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும், 596 இன்ஜினியரிங் கல்லூரிகளில், கடந்த ஆண்டில், இரண்டு லட்சம் இடங்கள் இருந்தன. ஆனால், கவுன்சிலிங் முடிவில், 80 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.இந்த ஆண்டு, இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் கூடுமா அல்லது குறையுமா என்பது, இம்மாத இறுதியில் தெரிய வரும். ஏற்கனவே, மூன்று கல்லூரிகள் தங்கள் கல்லூரியை மூடுவதற்கான கடிதத்தை, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலையில் கொடுத்துள்ளன. இதற்கு இரண்டு அமைப்புகளும் அனுமதி அளித்து, தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பாதிக்காமல், படிப்படியாக புதிய மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம், பல கல்லூரிகள் சில படிப்புகளை முடித்துக் கொள்ளவும், சில புதிய படிப்புகளை சேர்க்கவும், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலையில் அனுமதி கேட்டுள்ளன. இதற்கான ஆய்வுகள் முடிந்து, இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரிகள் மற்றும் படிப்புகளுக்கான அனுமதியை, அண்ணா பல்கலையிடம், ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும். பின், கல்லூரிகளுக்கான இணைப்பு ஆணையை, இம்மாத இறுதியில், அண்ணா பல்கலை பிறப்பிக்கும்.
இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:மே முதல் வாரத்தில், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரப் பட்டியல் வந்ததும், அந்தக் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் அனுமதி, மே இறுதி வாரத்திற்குள் வழங்கப்படும். அதன்பின், எந்தெந்த கல்லூரிகள் இந்த ஆண்டு செயல்படும், அவற்றிலுள்ள படிப்புகள் எவை என்ற விவரம் தெரியும். அதற்குள், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகி, மாணவர்களின் விண்ணப்பங்கள் பெறப்படும். இதையடுத்து, இந்த ஆண்டு அதிகபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடப்பட்டு, கல்லூரிகளின் தர வரிசை நிர்ணயிக்கப்படும். பின், ஜூன் முதல் வாரத்திற்குள், கல்லூரிகளின் 'கட் ஆப்' மற்றும் தர வரிசைப் பட்டியல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.ஜூன் இறுதி அல்லது ஜூலை 1ம் தேதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கும்.அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ பட்டியல் தவிர, தற்போதே பல போலி தர வரிசைப் பட்டியல்கள் வெளியாவதாக, தகவல்கள் வந்துள்ளன. மாணவர்களும், பெற்றோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்

கவுன்சிலிங்குக்கு 'ஆன் - லைன்' கடிதம்: அண்ணா பல்கலை புதிய திட்டம்


பொறியியல் கல்லூரி கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதம் மற்றும் நுழைவுத்தேர்வு அனுமதி சீட்டை, 'ஆன் - லைனில்' அனுப்ப, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம், வரும், 6ம் தேதி முதல், அண்ணா பல்கலை மற்றும் 59 மையங்களில் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் கவுன்சிலிங் அழைப்பு கடிதம் தபால் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதேபோல், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு மற்றும் கவுன்சிலிங் கடிதங்களும் தபால் மூலமே அனுப்பப்படும். ஆனால், தபாலில் அனுப்புவதில் முகவரி மாற்றம், வீட்டில் ஆள் இல்லாமல் இருப்பது போன்ற பல பிரச்னைகளால், கடிதங்கள் கிடைக்காமல், நகல் கேட்டு பல்கலைக்கு வருகின்றனர். இதனால் கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டு முதல், 'ஆன் - லைன்' முறையை படிப்படியாக கொண்டு வர, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, முதுகலை படிப்புக்கான, 'டான்செட்' தேர்வுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வுக்கான அனுமதி சீட்டை, 'ஆன் - லைனில்' அனுப்ப, பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதேபோல், கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதத்தையும், 'ஆன் - லைனில்' அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த முறை படிப்படியாக, இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் கொண்டு வர வாய்ப்புள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. பொறியியல் கவுன்சிலிங்கை, இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை 1ம் தேதி துவங்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. மேலும், கவுன்சிலிங்கை வேகமாக முடித்து, ஜூலை 31க்குள் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடவடிக்கையை முடிக்கவும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்புகளை துவங்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில்தொடங்க முடிவு


பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.தமிழகத்தில் 570-க்கும் மேற் பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இதில் அண்ணா பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அடங்கும். பிஇ, பிடெக் படிப்பில் சுமார் 2 லட் சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் மே 6-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதற்காக 2.4 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொறியியல் படிப் புக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள், தங்கள் பாலினத்தை குறிப் பிட விண்ணப்பத்தில் இந்த ஆண்டு முதல்முறையாக வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.விண்ணப்ப விநியோகம், கட் ஆப் மதிப்பெண் வெளியீடு, கலந்தாய்வு உள்ளிட்ட மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக் கான முன்னேற்பாடுகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகின்றன.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தொழில்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை களை ஜூலை 31-ம் தேதிக்குள் நடத்தி முடித்துவிட வேண்டும். எனவே,பொது கலந்தாய்வு மட்டுமல்லாமல், பிளஸ் 2 துணைத் தேர்வெழுதி வெற்றி பெறும்மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வையும் அதற் குள் அண்ணா பல்கலைக்கழகம் முடித்தாக வேண்டியுள்ளது.இதையெல்லாம் கருத்தில் கொண்டு பொறியியல் கலந் தாய்வை ஜூலை முதல் வாரத் தில் தொடங்க ஏற்பாடு செய் திருப்பதாக தமிழ்நாடு பொறி யியல் மாணவர் சேர்க்கை செய லாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

எஞ்சினியரிங்கில் எது பெஸ்ட்?


மருத்துவத்தை அடுத்து மாணவர்களை அதிகம் வசீகரிக்கும் துறை என்றால் அது பொறியியல்தான். முன்பு பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இப்போது தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லை. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று +2வில் தேர்ச்சி பெற்றாலே, கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் படிப்பில் சேர்ந்து விட முடியும். ஆனால் எல்லோருக்கும் பொறியியல் படிப்பு பொருந்துமா...?
இடம் கிடைக்கிறது என்பதற்காக எல்லோரும் இந்தப் படிப்பை தேர்வு செய்வது சரியா? சரியில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சுயம் இருக்கிறது. தனித்திறன் இருக்கிறது. அந்த திறனை அடையாளம் கண்டு, அதற்கேற்ற துறையைத் தேர்வு செய்வது தான் எதிர்காலத்துக்கு நல்லது.
மருத்துவத்துக்கு உயிரியலும் வேதியியலும் முக்கியம். பொறியியலுக்கு கணிதமும் இயற்பியலும் முக்கியம். குறிப்பாக, எந்த அளவுக்கு கணிதத்தின் மீது ஆர்வமும் புலமையும் இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர் பொறியியலில் சாதிக்கலாம். (அதனால்தான் அண்ணா பல்கலை நடத்தும் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் +2 மதிப்பெண்கள், இயற்பியலுக்கும் வேதியியலுக்கும் தலா 50 ஆக இருக்க, கணக்குக்கு மட்டும் 100 ஆக இருக்கிறது) கணிதத்தை பொறியியல் உள்ளிட்ட எல்லா அறிவியலுக்கும் தாய் (Mother of all sciences) என்றும், சுருங்கச் சொல்லும் அறிவியல் (Science of brevity) என்றும் சொல்வதைக் கவனியுங்கள். பொறியியலை `Applied Mathematics’ என்றும், கணிதத்தை `Theoretical Engineering’ என்றும் என் போன்றோர் குறிப்பிடுவோம். ஆய்லர் போன்ற கணித அறிஞர்கள், கணிதத்தோடு மட்டும் நிற்காமல் பொறியியலின் பல துறைகளிலும் வியத்தகு உண்மைகளைக் கண்டறிந்து உதவியதற்குக் காரணம் அவர்களது கணித அணுகுமுறை தான். ஆகவே, கணக்கு எனக்கு பிணக்கு’ என்பவர்கள் பொறியியலுக்கு வணக்கம் சொல்லிவிடலாம்.
அடுத்த கேள்வி, தமிழ்நாட்டில் 600க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 80க்கு மேற்பட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுவதால், எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது.
இதற்கு, சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ எஞ்சினியரிங்... என்ற அடிப்படைப் பிரிவுகளில் வகைப்படுத்துவது பலன் அளிக்கும். இதே காலவரிசையில்தான் இவை தோன்றின.கீழே சில பிரிவுகளை தொகுத்து தந்திருக்கிறேன். பொறியியலில் உள்ள எல்லாப் பிரிவுகளையும் வைத்துக்கொண்டு குழம்புவதைவிட தமக்கு ஆர்வமுள்ள பிரிவுகளின் தொகுப்பில் மட்டும் கவனம் செலுத்த கீழ்க்கண்ட பட்டியல் உதவும். முக்கியமான, வேலைவாய்ப்பு குறையாத துறைகளில் உள்ள சிறப்புப் பாடப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
Civil:
Civil (Engineering), Geo Informatics, Architecture, Planning, Arch (Interior Design), Transportation.
Mechanical:
Mechanical, Aeronautical, Aerospace, Automobile, Industrial, Mechatronics, Manufacturing, Printing, Design & Manufacturing, Energy, Industrial Engineering & Management, Production, Mining, Material Sc.&Engg, Industrial & Production Engg.
Electrical:
Electrical & Electronics, Instrumentation & Control.
Electronics:
Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication, Electronics & Instrumentation, Medical Electronics.
Computer Sc:
Computer Sc.& Engg, Computer Sc.& Information Tech, Computer Software, Information Tech, Information Tech & Management, Communication and Computer Engg, Computer Sc & Information Tech.
Bio Sc:
Bio energy, Biotechnology, Industrial Biotechnology, Biomedical, Biomedical Instrumentation, Bioinformation, Pharmaceutical Technology, Pharmaceutical Engg.
Chemical:
Chemical Engg, Chemical Tech, Metallurgical Engg, Metallurgical Engg & Material Sc., Chemical & Electrochemical Engg, Ceramic Tech, Petroleum Engg, Petroleum Tech, Petro refining & Petrochem Tech, Plastic Tech, Rubber& Plastic Tech, Fertilizer and Chemical Tech.
Others:
Food Tech, Leather Tech. Fashion Tech, Apparel Tech, Paper & Pulp Tech, Carpet & Textile Tech, Medical Nanotech.
மேலும் சில விஷயங்களை கேள்வி - பதில் பாணியில் பார்க்கலாம்?
எஞ்சினியரிங் (BE), டெக்னாலஜி (B.Tech) என்று இருவகைகளில் பாடப்பிரிவுகள் இருப்பதும், சில பாடப்பிரிவுகள் இரண்டு வகையிலும் வழங்கப்படுவதும் மேற்கண்ட பட்டியலிலிருந்து தெரியும். அப்படியானால், BE/B.Tech இரண்டுக்கும் வேறுபாடு உண்டா?
பொதுவாக BE படிப்பில் அடிப்படைத் தத்துவங்கள் அதிகமாகவும், B.Tech படிப்பில் பயன்பாடுகள் அதிகமாகவும் கற்பிக்கப்படும். அதாவது, முன்னதில் ஆழம் மிகுதியாகவும், பின்னதில் அகலம் அதிகமாகவும் இருக்கும். இதனால், அடிப்படை ஆராய்ச்சிக்கு BE-யும், பயன்பாட்டுக்கு B.Tech-ம் மிகுதியாக உதவும். கணினி அடிப்படையிலான CSE (BE), IT(B.Tech) ஆகிய இரண்டில் முன்னது அதிகமாக விரும்பப்படுவதற்கு இது ஒரு காரணம். ஆனால், இந்த அடிப்படை வேறுபாட்டின்படியே எல்லா BE/B.Tech பிரிவுகளுக்கும் பெயர் இடப்படுவதில்லை. IIT போன்ற Institutes of Technology எனப் பெயர் கொண்ட கல்லூரிகளில் எல்லாப் பிரிவுக்கும் B.Tech பட்டமும் CEG போன்ற College of Engineering எனப் பெயர் கொண்ட கல்லூரிகளில்் BE பட்டமும் முதலில் இவ்வாறே பெயரிடப்பட்டன.
ஆகவே, BE/B.Tech என்ற வேறுபாடுகளை அவ்வளவாக கவனிக்க வேண்டியதில்லை.அண்ணா பல்கலை நடத்தும் கலந்தாய்வுக்கான தகவல் கையேட்டில் சில பாடப்பிரிவுகளின் பெயர்களின் முடிவில் (SS) என இருக்கும். அதன் பொருள் என்ன?
விடை: `Self Supporting’ என்பதன் சுருக்கமே `SS’. அதாவது அந்தப் பாடப்பிரிவு, அரசின் பொருள் உதவி பெறாமல் நடத்தப்படுவது. எனவே அத்தகைய பாடப் பிரிவுக்குக் கட்டணம் கூடுதலாக இருக்கும்.
சில கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகள் `Accredited’ என்ற தகுதி பெற்றிருக்கும். அதற்கு என்ன பொருள்?
விடை: NBA(National Board of Accreditation) என்ற அரசு அமைப்பில் தரம் ஆராயப்பட்டுத் தரச்சான்று வழங்கப்பட்ட பாடப்பிரிவு என்பது பொருள். இதைத் தேர்வு செய்தாலும் கட்டணம் அதிகம் இருக்கும். தாம் விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடப்பிரிவில், SS / Accredited தகுதி பெற்றதும், பெறாததுமான இருவகை இடங்களும் இருந்தால், அத்தகுதிகள் பெறாத இடத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
சிவில், மெக்கானிக்கல் பிரிவுகள் பெண்களுக்கு ஏற்றவையா?
ஏற்றவையே. தமிழ்நாட்டில் மரைன் எஞ்சினியரிங், மைனிங் எஞ்சினியரிங் பிரிவுகள் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன. உடற்கூறு மற்றும் பாதுகாப்பு குறித்தே இந்த வரையறை. மரைன் எஞ்சினியரிங் படிக்க விழையும் ஆண்களுக்கு கூடுதலான கட்டுப்பாடுகளும் உண்டு. வயது (25), எடை (7/45kg), உயரம், மார்பு அளவு, பார்வைத்திறம் ஆகியவை வரம்புக்குள் இருக்க வேண்டும். கப்பலில் சிலகாலம் பாடம் சொல்லித் தரப்படுவதால், கூடுதல் கட்டணமும் உண்டு. மற்றபடி இது பலராலும் விரும்பப்படுவது. பிறர் செலவில் (சம்பளத்தில்) ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக ஏற்றது. கணிசமாகவும் வரியில்லாமலும் சம்பாதிக்கலாம். மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் தரை மட்டத்திற்குக் கீழ் சுரங்கங்களில் பணியாற்றக் கூடாது எனச் சுரங்க அமைச்சகத்தின் விதி இருப்பதால் பெண்களுக்குச் சுரங்கவியலில் (தமிழ்நாட்டில்) இடம் மறுக்கப்படுகிறது. மற்றபடி சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் எல்லாம் விதிவிலக்குகள் இல்லை. தாராளமாகப் படிக்கலாம்.
புதிய, அதிக வேலைவாய்ப்புகள் கொண்ட பாடப்பிரிவுகள் எவை?
கெமிக்கல் மற்றும் மெட்ரோ கெமிக்கல் எஞ்சினியரிங், உணவுத் தொழில்நுட்பம், ஃபார்மாசூட்டிகல் டெக்னாலஜி, பெட்ரோலியம் ரீஃபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் எஞ்சினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனப் பொறியியல், ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பம் ஆகியவை அண்மையில் தோன்றியுள்ள சில கவனத்தை ஈர்க்கும் பாடப்பிரிவுகள். பெட்ரோலியம் சார்ந்த படிப்புகளுக்கு அரபு நாடுகளில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன.
பேராசிரியர் ப.வே.நவநீதகிருஷ்ணன்
முன்னாள் இயக்குநர், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு