Monday, February 5, 2018

இன்ஜி., முதல் பருவ தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு கணிதம், இயற்பியலில் 50 சதவீதம் பேர், 'அவுட்'


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் முதல் பருவ தேர்வில், கணிதம் மற்றும் இயற்பியலில்,
50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன.

அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் பி.ஆர்க்., கல்லுாரிகளில், தன்னாட்சி கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அண்ணா பல்கலையின் வினாத்தாள்கள் கடினமாகவும், மாணவர்களின் சிந்தனை திறனை சோதிக்கும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன. அதனால், அண்ணா பல்கலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், எந்த போட்டி தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.
இந்நிலையில், 2017ல், பிளஸ் 2 படிப்பை முடித்து, இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்ட் படிப்பில் சேர்ந்த மாணவர்கள், நவம்பரில் நடந்த முதல் பருவ தேர்வில் பங்கேற்றனர். அண்ணா பல்கலையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு நடந்த, முதல் தேர்வு இது.முதல் பருவதேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு முடிந்து, தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஜி.வி.உமா நேற்று அறிவித்தார்.
அண்ணா பல்கலையின் இணையதளம் மட்டு மின்றி, மாணவர்களின் மொபைல்போன் எண்களுக்கும் நேரடியாகவே, மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டன. பகல், 2:00 மணி முதல், 'ரிசல்ட்' வெளியிடப்பட்டது.இந்த தேர்வு முடிவில், கணிதத்தில், 43.67; இயற்பியலில், 52.77 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, ஆங்கிலத்தில், 80.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடல்சார் இன்ஜி., வேதியியல் பாடத்தில், 71.59; பொது வேதியியலில், 59.08; சிக்கலான கணக்குகளை தீர்க்கும் வகையிலான, 'ப்ராப்ளம் சால்விங்' பிரிவில், 61.7; இன்ஜி., கிராபிக்ஸ், 63.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகளுக்கு உதவும், தொழில்நுட்ப ஆங்கிலத்தில், 55.68 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
கணிதம் மற்றும் இயற்பியலில், 50 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், அந்த பாடங்களில் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க, இன்ஜி., கல்லுாரிகள் முடிவு செய்து உள்ளன.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், 'பிளஸ் 2வில், மனப்பாட முறையில் படித்து வந்த பல மாணவர்கள், கணிதம், இயற்பியலில் சிக்கலான கணக்குகளை தீர்க்க சிரமப்பட்டுள்ளனர்.'அவர்களுக்கான பயிற்சிகள் தொடர்கின்றன. இரண்டாவது பருவ தேர்வுகளில், இந்த நிலைமை மாறிவிடும்' என்றனர்.
தமிழ் வழியில் மதிப்பெண் குறைவு தமிழ் வழி மாணவர்கள், ஆங்கில வழி மாணவர்களை விட, குறைந்த தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியலில், 37.24; இன்ஜி., கிராபிக்ஸ், 62.46; 'ப்ராப்ளம் சால்விங்' 64.52; கணிதம், 26.39; இயற்பியல், 33.14 சதவீதம் பேர் தேர்ச்சியாகி உள்ளனர். 'ப்ராப்ளம் சால்விங்' பிரிவில், ஆங்கில வழி மாணவர்களை விட, தமிழ் வழியில், 2.82 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மொபைல்போனில், 'ரிசல்ட்' வழக்கமாக இணையதளத்தில் மட்டுமே, அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை, மாணவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, நேரடியாக மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டது. பெரும்பாலான மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோரின் மொபைல்போன் எண் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவர்களுக்கு பிள்ளைகளின் மதிப்பெண் தெரிய வந்தது. புதிய விதிகளின் படி, ஆங்கிலத்தில், 'ஓ' பிரிவு முதல் வகுப்பாக கருதப்படுகிறது. 'ஏ, ஏ பிளஸ், பி, பி பிளஸ்' ஆகிய தர வரிசை எண்களில் உள்ளவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள். அதற்கு குறைவான மாணவர்கள் தேர்வை, மீண்டும் எழுத வேண்டும்.

No comments:

Post a Comment